சென்னை : சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் புலிகள் பாதுகாப்பில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தி பெருமைபெறுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு :
“தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் 306 புலிகள் உள்ளன. இந்த சாதனை, கடின நிலப்பரப்புகளில் புலிகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் வன ஊழியர்களின், வேட்டை எதிர்ப்பு குழுக்களின் தியாகமான பணியால் சாத்தியமாகியுள்ளது.”
வனப்பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை:
நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வழங்கல், கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து புலிகள் பராமரிப்பு, 1947 களப்பணியாளர் பணியிடங்கள் நிரப்பம், வனத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, புலிகள் வாழும் சூழலை மேம்படுத்துதல், மேலும், வனவிலங்கு குற்றங்களை தடுக்கும் வகையில், வனத்துறை மற்றும் வனவிலங்குகள் குற்றத்தடுப்புப் பிரிவு சிறப்புப் படையாக உருவாக்கப்பட்டுள்ளது. “புலிகளை காப்பதன் மூலம், நாம் நமது வனத்தின் ஆன்மாவையும் காக்கிறோம்” என முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.