புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு – முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்டு வருவதால் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருகிறது திருவாரூர் நான்காவது புத்தகத் திருவிழா..
திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி தொடங்கியது. வழக்கமாக திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாபெரும் திடல் பகுதியில் பந்தல் அமைத்து புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருவது வழக்கம். இதனால் புத்தகத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் அந்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருப்பர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழாவானது, திருவாரூர் நகருக்கு வெளியே இலவங்கார்குடி கிராமத்தில் உள்ள மங்கள்வரதர் என்ற தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் தரைத்தளத்தில் புத்தகத் திருவிழாவுக்கான ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் தாளத்தில் விழா அரங்கு அமைக்கப்பட்டு அதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உரையாற்றி வருகின்றனர். இந்த புத்தக திருவிழா குறித்து பொதுமக்களுக்கு முறையான விளம்பர அறிவிப்புகள் செய்யாததன் காரணமாக இந்த நான்காவது புத்தகத் திருவிழா கூட்டமின்றி கலை இழந்து காணப்படுகிறது. குறிப்பாக இதுவரை நடந்த 3 புத்தகத் திருவிழாக்களில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1000க்கும் அதிகமானோர் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த நான்காவது புத்தக திருவிழாவில் நூற்றுக்கும் குறைவான பொதுமக்களே பங்கேற்று வருகின்றனர். நான்காவது புத்தகத் திருவிழா தொடங்கிய நாள் அன்றே சிற்றுண்டி உணவகம் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்டால் பகுதியில், பெரிய குடிநீர் தொட்டி கீழே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு சமைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மின்சாதனங்களில் தண்ணீர் தேங்கி வீணானது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் புத்தகத் திருவிழாவுக்கு மாணவர்களை அழைத்து வந்த பேருந்து, திடீரென நின்று விட்டதால் பள்ளி மாணவர்கள் அந்த பேருந்தை தள்ளிச் சென்றனர். தற்போது நிறைவு நாளான இன்று புத்தகத் திருவிழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ரோகித் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். மதியம் மூன்று மணி ஆன பிறகும் மதிய உணவு சாப்பிடாதன் காரணமாக மாணவன் ரோகித் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு திருவாரூரில் நடைபெற்று வரும் நான்காவது புத்தக திருவிழா முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்டு வருவதால் தொடர் சிக்கல் ஏற்பட்டு மாணவர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
