விழுப்புரம், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கத்தினர் இரண்டாம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இந்த சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடைத்தராசையும், நியாயவிலைக் கடைகளிலுள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து, சரியான எடையில். அத்தியாவசியப் பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும்.
தாயுமானவர் திட்டத்திலுள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும், மகளிர் நியாயவிலைக் கடையை அரசே நடத்தி, அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் நாள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 814 முழு நேர நியாயவிலைக் கடைகளில் 610 கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலை நிறுத்தப் போராட்டத்தைதொடர்ந்து, விழுப்புரம் நகராட்சித் திடலில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான கே.சம்பத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோபிநாத், பொருளாளர் ரஷீத், துணைத் தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலர்கள் தனசேகரன், சம்சுதீன், துணைத் தலைவர்கள்கதிர்வேல், தங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து புதன், வியாழக்கிழமைகளில் வேலை நிறுத்தப் போராட்டமும், கோட்ட மற்றும் வட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.

















