: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் கிராமத்தில், வெறிபிடித்த தெருநாய்கள் ஆட்டு மந்தைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 20 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தூர்பாண்டி என்பவர் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காக சுமார் 120 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு, மாலையில் வீடு அருகே உள்ள வயல்காட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று வழக்கம்போல மேய்ச்சல் முடிந்து திரும்பிய ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு செந்தூர்பாண்டி உறங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் பட்டியில் புகுந்த தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து ஆடுகளை ஓட ஓட விரட்டிக் கடித்துக் குதறின.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த செந்தூர்பாண்டி, உடனடியாக ஓடி வந்து தெருநாய்களை விரட்டினார். எனினும், நாய்களின் கோரத் தாண்டவத்தில் 20 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மேலும் 5 ஆடுகள் பலத்த காயமடைந்தன. இதுகுறித்து உடனடியாக சாயல்குடி கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர், காயமடைந்த ஆடுகளுக்குத் தடுப்பூசி செலுத்தி தீவிர சிகிச்சை அளித்தார்.
உயிரிழந்த 20 ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தனது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் நம்பியிருந்த ஆடுகள் பலியானதால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ள செந்தூர்பாண்டி, “கடன் வாங்கி வளர்த்த ஆடுகள் இப்படி கண்முன்னே பலியானதை ஜீரணிக்க முடியவில்லை. அரசு உரிய ஆய்வு நடத்தி எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்” என கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

















