திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசின் அங்கீகாரத்துடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ‘மனோலயம்’ சிறப்புப் பள்ளியில், மாணவர்களின் நலன் கருதி பிரத்யேக மருத்துவப் பரிசோதனை முகாம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூத்தாநல்லூர் தமிழர் தெரு மற்றும் லெட்சுமாங்குடி ஆகிய இரண்டு இடங்களில் இயங்கி வரும் இப்பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு, தற்போதைய பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த மருத்துவ ஆய்வு ஒருங்கிணைக்கப்பட்டது. பள்ளியின் நிறுவனர் மனோலயம் ப.முருகையன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் பார்த்திபன் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்று மாணவர்களைப் பரிசோதித்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எளிதில் ஏற்படக்கூடிய சளி, இருமல் மற்றும் மூச்சுக்குழாய் தொடர்பான பாதிப்புகளைக் கண்டறியும் பொருட்டு, அதிநவீன உபகரணங்கள் மூலம் முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து மற்றும் மாத்திரைகள் அங்கேயே இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களைக் கையாள்வதில் சிறப்பு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய மருத்துவ விழிப்புணர்வு குறித்தும் மருத்துவர் ஆலோசனை வழங்கினார். இந்த மனிதாபிமான மிக்கப் பணியினை மனோலயம் பள்ளியின் இயன்முறை மருத்துவர் பாபுராஜன், சிறப்பு ஆசிரியர்கள் கிரிஜா, சரண்யா மற்றும் பயிற்சியாளர்கள் சௌமியா, துர்கா, ஷர்மிளா ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். சமுதாயத்தில் பின்தங்கியுள்ள இந்தச் சிறார்களின் ஆரோக்கியத்தில் காட்டிய இந்தச் சிறப்பான அக்கறை, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.















