தென் திரு ஆலவாய் கோயில் என்பது, தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும்.
இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இங்குள்ள சிவமூர்த்தி அளவில் பெரியவர். இது தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில்.
இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில்.
சைவ சமயத்தை சார்ந்த பாண்டிய அரசன் கூன் பாண்டியன் சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அரசி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள்.
அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். சமணர்கள் பலவிதமான மருத்துவம் செய்தும் கூன்பாண்டியனின் வெப்புநோயை
குணப்படுத்த இயலவில்லை. 
மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடிய சிவபெருமானுக்கு அனைத்து அபிஷேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றறை கூன்பாண்டியன் மீது பூசி விட்டால் வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார்.
உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. 
இதனால் கூன்பாண்டியன் சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது
தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. 
இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால் மரணத்துன்பம் நீங்குகிறது என்பது ஐதீகம்.. தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம் பற்றி அடுத்த பாகத்தில் காணலாம்.
 
			















