மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்!

திருத்தணியில் நடைபெறவுள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட சென்ற போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

சமீபகாலமாக நூதனமான போராட்டங்களை நடத்தி வரும் சீமான், பனையேறும் தொழிலாளர்களுக்காக பனைமரத்தில் ஏறி “கள் மீதான தடையை நீக்க வேண்டும்” எனக் கோரியும், மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மாடுகளை மேய்த்தும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.

அதேபோல், வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் “மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காகப் பேசுவோம்!” என்ற தலைப்பில் மரங்களின் மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான இடத்தை அவர் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது மரங்களை அணைத்து, முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவை வைரலாக பரவி வருகின்றன.trees

பின்னர் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:
“மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழ்ந்து விடும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்களும், எந்த உயிரினமும் வாழ முடியாது. உலக உயிர்களின் மூச்சு மரங்களே. இதையே நாம் ஆக்சிஜன் என்று சொல்கிறோம்.

பிள்ளைகளுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். ஆனால் இந்த அரசு மரங்களை மண்ணில் வளர்க்காமல், பதாகைகளில் மற்றும் விளம்பரங்களில் மட்டுமே வளர்க்கிறது.

1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஒவ்வொரு தலைவரின் பிறந்தநாளிலும் 1.5 கோடி மரம் நாட்டியிருந்தால் இன்று எத்தனை கோடி மரங்கள் வளர்ந்திருக்கும். அதுபோலவே நடிகர்களும், ரசிகர்களிடம் ‘பிறந்த நாளில் மரம் நடுங்கள்’ என்றிருந்தால் எவ்வளவு பசுமை வளர்ந்திருக்கும்.

பருவநிலை மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். உண்மையில் பருவநிலையே மாறிவிட்டதா, அல்லது நீங்கள்தான் அதை மாற்றினீர்களா? வணங்குவதற்கு லட்சம் சாமிகள் இருக்கலாம். ஆனால் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமிதான் உள்ளது. வெயில் அடித்தால் குடை பிடிக்கிறோம். புவி வெப்பமடைதலைத் தடுக்க வேண்டுமானால் பச்சைக் குடை பிடிக்க வேண்டும். அதுதான் மரக் குடை.

வளர்ப்பதில் என்ன கஷ்டம்? நான் பத்தாண்டு பசுமைத் திட்டத்தையும், பல கோடி பனைத் திட்டத்தையும் அறிவித்து விடுகிறேன். ஐந்து ஆண்டுகள் ஆட்சியைத் தாருங்கள்; இந்த பூமியை பச்சை போர்வையால் போர்த்தி விடுவேன்,” என்றார் சீமான்.

Exit mobile version