ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் – ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்றுகள் நடும் திட்டம், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, தேரிருவேலி, மட்டியாரேந்தல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சாலையோரங்களில் வேப்ப மரம், புளிய மரம் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மேயாமல் இருப்பதற்காக இரும்பு வலைகளால் (Tree Guards) பாதுகாக்கப்பட்ட போதிலும், அடிப்படைத் தேவையான தண்ணீர் ஊற்றப்படாததால் அவை தற்போது கருகி வருகின்றன.
பொதுவாகச் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் போது வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, புதிய மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்பது விதியாகும். இதற்காகப் பல லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தேரிருவேலி பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுச் சில நாட்களிலேயே தண்ணீர் இன்றி வாடத் தொடங்கியுள்ளன. பல இடங்களில் மரக்கன்றுகள் முற்றிலும் பட்டுப்போய்க் காய்ந்த குச்சிகளாகக் காட்சியளிக்கின்றன. “பெயரளவிற்கு மரக்கன்றுகளை நட்டுவிட்டு, அதன் பின்னர் அவற்றைத் திரும்பிப் பார்க்காதது அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது” எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் மரங்கள் நடப்படுவது பயணிகளுக்கு நிழல் தருவதற்கும், மண் அரிப்பைத் தடுப்பதற்கும் மிக அவசியமாகும். ஆனால், தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தனியான ஆட்கள் அல்லது வாகனங்கள் நியமிக்கப்படாததால், அரசு செலவிட்ட நிதி அனைத்தும் வீணடிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் இப்பகுதியில் உடனடியாக ஆய்வு நடத்தி, காய்ந்து போன மரக்கன்றுகளுக்குப் பதிலாகப் புதிய கன்றுகளை நடவும், அவற்றைத் தினசரி முறையாகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேரிருவேலி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பசுமைத் திட்டங்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், மண்ணில் வேரூன்றி வளர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
