பாதுகாப்பான பயணமே வாழ்வின் இனிமை.. மேலூரில் மாணவர்கள் நடத்திய சாலை பாதுகாப்பு முழக்கம்

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை மற்றும் மேலூர் போக்குவரத்து காவல்துறை ஆகியவை இணைந்து, வளர்ந்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மேலூரில் நடத்தின. மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டம் மற்றும் மேலூர் உட்கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணி, மேலூர் அரசு இருபாலர் பள்ளி அருகே தொடங்கியது. சமூகப் பொறுப்புணர்வுடன் நடைபெற்ற இந்தப் பேரணியை மேலூர் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலமுருகன் மற்றும் மேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், சாலை விதிகளைக் கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றதுடன், “தலைக்கவசம் அணிவோம், உயிரைக் காப்போம்”, “அதிவேகம் ஆபத்து” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில், போக்குவரத்து விதிமுறைகள், விபத்தில்லாமல் வாகனங்களை இயக்குவது மற்றும் சாலை சமிக்கைகளை (Signals) முறையாகப் பின்பற்றுவது குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. விபத்தில்லாத் தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என மாணவர்கள் அனைவரும் பக்திப்பூர்வமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சக்திகுமார், சாலை ஆய்வாளர்கள் கார்த்திக் ராஜா, இருளப்பன், வேதநாயகம் மற்றும் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்கள் ஜெயபாண்டி, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பள்ளித் தலைமையாசிரியர் முனியாண்டி, பள்ளி ஆசிரியர்கள், போக்குவரத்துச் சாலைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் மேலூர் அரசு இருபாலர் பள்ளி மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பிற்கான தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். இத்தகைய விழிப்புணர்வுப் பேரணிகள் மூலம் எதிர்காலத் தூண்களான மாணவர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு மேலோங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Exit mobile version