மணிப்பூரில் மீண்டும் கலவரம் தீவிரம் : தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பதற்றம்

இம்பால் :
மணிப்பூரில் மீண்டும் மெய்தி மற்றும் குக்கி இனக் குழுக்களுக்கிடையே வன்முறை தீவிரமடைந்ததால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இரு முக்கியப் பகுதிகளில் நடந்த கைது நடவடிக்கைகள் பின்னணியில் இருக்கிறது என தெரியவந்துள்ளது.

முக்கியக் காரணம் : இரட்டை கைது

மெய்தி இனத்தினரின் அமைப்பான ‘அரம்பாய் தெங்கொல்’ குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் கனன் சிங் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தலைநகரான இம்பால் பகுதியில் வன்முறை வெடித்தது. இதற்கிடையில், தமிழர்கள் பெரும்பாலானோர் வாழும் மொரே நகரில், ஜூன் 5ஆம் தேதி, குக்கி இனத்தைய சேர்ந்த காம்கின்டாங் காங்டே என்பவரை NIA கைது செய்தது.

இரண்டாம் கைது பழங்குடி மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு: விலை இரண்டு மடங்கு

கலவரங்களை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அசாம், நாகலாந்து, மிசோரம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி, இறைச்சி, மருந்து உள்ளிட்ட பொருட்கள் அனுப்ப முடியாமல் போனதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முன்பு இம்பாலுக்கு நேரடியாக வந்த பொருட்கள் தற்போது மிசோரம் வழியாக வரும் காரணத்தால், போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரித்து விட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் 2 மற்றும் 37 மூடப்பட்டிருப்பதும் முக்கிய காரணம்.

விலை உயர்வால் பொதுமக்கள் அவதி

பழங்குடியினம் அதிகமாக வாழும் பகுதிகளில் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பதில்லை என சூரசந்த்பூர் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் மேக்ஸ் முவான் கூறுகிறார்.

“அரிசி, தக்காளி, வெண்டைக்காய், மீன், இறைச்சி போன்றவற்றின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது வர்த்தகர்கள் உருவாக்கிய செயற்கை விலை அல்ல. போக்குவரத்து பாதைகள் முடங்கியதே முக்கியக் காரணம்” என்றார் அவர்.

வெள்ளமும் வன்முறையும்

இறுதி அடியாக, மணிப்பூரில் தென்மேற்கு பருவமழையால் இம்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் சேதமான நிலையில், மீண்டும் வன்முறை தொடங்கியிருப்பது மக்களை 2023ஆம் ஆண்டின் கடுமையான வன்முறைகள் நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது.

Exit mobile version