வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர் தேர்தலுக்கு முன் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தேர்தல் பணி புறக்கணிப்பு பணியில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதம் பங்களிப்பை இரத்து செய்திட வேண்டும், பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7 -வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் வருகிற தேர்தலுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாத பட்சத்தில் தேர்தல் பணிபுறக்கணிப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுக்கு சூசக எச்சரிக்கை விடுத்தனர்.
















