விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் பகுதியில், சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு கொண்ட அரிய வகை “நட்சத்திர ஆமை” (Indian Star Tortoise) ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை சிறுகுளம் கண்மாய் கரைப் பகுதியில் மூலிகைச் செடிகளைப் பறிப்பதற்காகச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், புதருக்குள் ஏதோ ஒன்று வினோதமாக ஊர்ந்து செல்வதைக் கவனித்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அது பெரிய அளவிலான நட்சத்திர ஆமை என்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த இளைஞர்கள் அந்த அரிய வகை ஆமையைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், இதுகுறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாமன்ற உறுப்பினரின் உதவியுடன் மீட்கப்பட்ட ஆமை சிவகாசி நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அந்த ஆமையின் ஓட்டில் இருந்த துல்லியமான மற்றும் அழகான நட்சத்திர வடிவிலான கோலங்களைக் கண்டு, காவல் நிலையத்திற்கு வந்த பொதுமக்களும் போலீசாரும் மிகுந்த வியப்படைந்தனர். பொதுவாக இத்தகைய ஆமைகள் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் நிலையில், மக்கள் நடமாட்டம் உள்ள கண்மாய் பகுதியில் இது சிக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த வனத்துறையினர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து, முறைப்படி அந்த அரிய வகை நட்சத்திர ஆமையை மீட்டுச் சென்றனர். ஆமையின் உடல்நிலையைப் பரிசோதித்த பின், அதனைப் பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு நட்சத்திர ஆமை கிடைத்துள்ளதால், சிறுகுளம் கண்மாய் பகுதியில் மேலும் இது போன்ற அரிய வகை ஆமைகள் இருக்கக்கூடும் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, கண்மாய் முழுவதும் விரிவான ஆய்வு நடத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. அரிய வகை உயிரினங்களைக் கண்டால் அவற்றை வேட்டையாடாமல், சட்டவிரோதமாக விற்க முயலாமல் வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
