புதுடில்லி : இந்திய ராணுவம், பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்வதற்காக, ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்களை அவசரகால கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு துறையின் கவனம், உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை அவசரமாக வாங்கும் வேலைகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரூ.1,981 கோடி மதிப்பிலான 13 ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, ரூ.2,000 கோடி மதிப்பில் ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
தற்போது கொள்முதல் செய்யப்படும் முக்கியமான ஆயுதங்கள் பின்வருமாறு:
- எதிரி ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் தொழில்நுட்ப ஆயுதங்கள்
- குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள் (LLLR)
- குறுகிய தூரத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள்
- குண்டுத் துளைக்காத பாதுகாப்பு ஜாக்கெட்டுகள்
- இரவிலும் பார்வையிட உதவும் நவீன கருவிகள்
- பாலஸ்டிக் ஹெல்மெட்டுகள்
- வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள்
இந்த ஒப்பந்தங்கள், நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகவும், பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் கருதப்படுகிறது