வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விடியவிடிய கனமழை
இதற்கிடையில், நேற்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
சென்னையை அடுத்த அம்பத்தூரில், கனமழையால் கழிவுநீர் வடிகால் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
சென்னையைத் தவிர, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஓசூர், மத்திகிரி, ஜுஜுவாடி, பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது.