ஐபிஎல் 2025 சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னணி அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஒருவரையொருவர் சவாலுக்கு அழைத்தன. வெற்றியாளர் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது உறுதி என்பதால், இந்த மோதல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
மும்பையின் அதிரடி தொடக்கம், இடைவெளியில் வீழ்ச்சி
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப், மும்பையை பேட்டிங் செய்ய அனுப்பியது. தொடக்க வீரர்களாக வந்த ரோகித் சர்மா – ரியான் ரிக்கல்டன் ஜோடி வேகமாக ரன்கள் குவித்தனர். ஆனால் ரோஹித் 21 பந்தில் 24 ரன்களிலும், ரிக்கல்டன் 27 ரன்களிலும் அவுட்டானார்கள். தொடர்ந்து வந்த திலக் வர்மா வெறும் 1 ரனில் வெளியேற, மும்பை அணியில் அதிர்ச்சி நிலவியது.
அதையடுத்து ஹர்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், நமன் திர் ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும், விக்கெட்டுகளை சீக்கிரமே இழந்தனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், தனியாக நின்று 57 ரன்கள் விளாசி, மும்பையை 184 ரன்கள் என்ற மொத்தத்துக்கு அழைத்துச் சென்றார்.
இந்நேரத்தில் சச்சின் டெண்டுல்கரின் 15 வருட சாதனையை முறியடித்து, ஒரு சீசனில் மும்பைக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சூர்யா குமார் இருக்கிறார். மேலும், ஐபிஎல்லும், டி20லுமாக 14 போட்டிகளில் தொடர்ச்சியாக 25க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த சாதனையையும் படைத்தார்.
பிரியான்ஸ் – இங்கிலீஸ் ஜோடி, பஞ்சாப் வெற்றிக்குக் கைகொடுத்தது
185 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சீக்கிரமே வெளியேறினார். ஆனால் பிரியான்ஸ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலீஸ் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து, 100 ரன்களை விக்கெட் இழப்பின்றி குவித்தனர்.
பிரியான்ஸ் 62, இங்கிலீஸ் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.3 ஓவரில் வெற்றியை வசப்படுத்திய பஞ்சாப், 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.
ஸ்ரேயாஸ் ஐயரின் வரலாற்றுச் சாதனை
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த சீசனில் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளை டாப் 2 இடத்திற்கு அழைத்த ஒரே கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் வரலாறு படைத்துள்ளார். மேலும் 2014க்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து பஞ்சாபை முதல் 2 இடங்களுக்கு வழிநடத்திய ஒரே கேப்டனாகவும் அசத்தினார்.
மும்பைக்கு எலிமினேட்டர் சவால்
இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் 4வது இடத்தில் நின்று எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை டாப் 2-ல் இல்லாமல் மும்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே இல்லை என்பதும் சுடச்சுட பேசப்படும் செய்தியாக இருக்கிறது.
நாளைய கடைசி லீக்: ஆர்சிபியா, டைட்டன்ஸா?
இப்போது கவனம் எல்லாம் நாளைய லக்னோ vs ஆர்சிபி மோதலில்தான். அந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றால், அவர்கள் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்து குவாலிஃபையர் 1-க்கு தகுதி பெறுவார்கள். இல்லையெனில் டைட்டன்ஸுக்கு வாய்ப்பு. யார் முன்னேறப் போகிறார்கள் என்பதற்கான முடிவு நாளை வெளிவரும்!