கோவையில் நடைபெற உள்ள தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை தர உள்ளார். இதை முன்னிட்டு நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால், கொடிசியா வளாகம் முழுவதும் விசேஷ பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தென் மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். மேலும் இயற்கை விவசாய துறையில் சிறப்பு சாதனை படைத்த 18 விவசாயிகளுக்கு பிரதமர் தாமே விருதுகள் வழங்க உள்ளார்.
புட்டபர்த்தியில் இருந்து தனியார் விமானத்தில் பிற்பகல் 1.25 மணிக்கு பிரதமர் கோவை விமான நிலையம் வருவார். அங்கு பாஜக சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். அதன் பின்னர் 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் சென்று மாநாட்டில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளை முடித்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, 3.30 மணிக்கு மீண்டும் விமான நிலையத்தை அடைந்து டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் நாளை மாலை 6 மணி வரை பார்கிங் வசதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாளை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை விமான நிலையத்திற்குள் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் அனுமதிக்கப்படாது. பயணிகள் 12 மணிக்கு முன்னதாகவே விமான நிலையம் வந்து சேர வேண்டும்; 12 மணிக்குப் பிறகு வருபவர்கள் சிட்ரா சந்திப்பில் இறங்கி நடைபயணமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் கடந்து செல்லும் அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஏர்போர்ட் ரோடு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டதால், அவை ஒண்டிப்புதூர்–சிங்காநல்லூர் வழியாக மாற்றி செலுத்தப்படுகின்றன. நாளை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை ஜி.டி. நாயுடு மேம்பாலம் மூடப்படும். மேலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனுடன், கோவை நகரின் பல முக்கிய பகுதிகள் நாளை இரவு 7 மணி வரை ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், SIHS காலனி, நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா, பீளமேடு, சரவணம்பட்டி, ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் பறத்தல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

















