திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க சென்று குளம் மற்றும் வாய்க்காலில் இறங்கி ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர் – காவலரை காப்பாற்றி முதலுதவி அளித்த கிராம மக்கள்..
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த கீழமணலி ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தனாங்குடி கிராமத்தில், மன்னார்குடி தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பாலச்சந்தர் தலைமையில் திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிப்பதற்காக நான்கு பேர் கொண்ட போலீசார் குற்றவாளிகளை பிடிக்க வந்துள்ளனர்.
அப்போது குற்றவாளிகளை உதவி ஆய்வாளர் பிடிக்க முயற்சி செய்தபோது குற்றவாளிகள் தப்பி ஓடி, அருகே இருந்த குளத்தில் இறங்கி, அருகில் இருந்த வீட்டின் வழியாக ஓடி உள்ளனர் . இதைப் பார்த்த கிராம மக்களும் பின்னால் ஓடிப் பார்த்தபோது காவல் உதவி ஆய்வாளர் வாய்க்காலில் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அவரை கிராம மக்கள் மீட்டுள்ளனர் .
இந்த நேரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை அவர்களின் சக கூட்டாளிகள் அழைத்துச் சென்றுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் வடபாதிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து வந்த போலீசார் ஒரு குற்றவாளியை மட்டும் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், மற்றொரு குற்றவாளி காலில் படுகாயத்துடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளரை கிராம மக்கள் அருகே இருந்த வீட்டில் வைத்து முதலுதவி செய்து, அவரை மயக்க நிலையில் இருந்து காப்பாற்றி சக காவலர் பாதுகாப்புடன் ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கிராமவாசி குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த போது..
நீண்ட காலமாக எங்கள் பகுதியில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வருகிறது .இது குறித்து வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது., அவர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும் எனவும், சட்டங்கள் மாறி உள்ளதால் அடிக்க முடியாது எனவும் தெரிவித்ததாகவும், தற்போது வரை எங்களது பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் போலீசார் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க விரட்டிய போது உதவி ஆய்வாளர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு முதலுதவி செய்து அவரை அனுப்பி வைத்தோம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திருடர்களை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர், தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடியவரை கிராம மக்கள் மீட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .













