அரியலூர் :
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். திருச்சி மரக்கடை பகுதியில் காலை பரப்புரை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ள நிலையில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் பிரசாரம் நடைபெறவுள்ளது.
திருச்சி மரக்கடை பரப்புரைக்கு 20 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரியலூரில் நடைபெறவுள்ள பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நாளை மதியம் 2 மணியளவில் விஜயின் பிரசாரம் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியை தவெக தரப்பினர் கோரியிருந்தனர்.
காவல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில் சில முக்கிய அம்சங்கள்:
விஜயின் பரப்புரை வாகனத்திற்கு பின்னால் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
வரக்கூடிய வாகனங்களுக்கு முன்கூட்டியே பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுமக்கள், சட்டம்-ஒழுங்கு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
பொதுமக்கள் சிரமமின்றி பரப்புரையை காண தடுப்பு அரண்கள் அமைக்கப்பட வேண்டும்.
தவெகவினர் பிறர் மனதை புண்படுத்தும் வகையிலோ, சாதி-மத உணர்ச்சிகளை பாதிக்கும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.
பொது சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது; சேதம் ஏற்பட்டால் ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
பரப்புரையின்போது நோட்டீஸ், துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க அனுமதி இல்லை.
மேலும், நிபந்தனைகளை மீறினால் பரப்புரையை இடைநிறுத்த காவல்துறைக்கு முழு அதிகாரம் உண்டு என துணைக் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.