உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின் போது பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் பீ பீ என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அதிரடி உத்தரவு..
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது.தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும். ‘திருவாரூர் தேரழகு’ என்பது சொல் வழக்கு. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது. அலங்கரிக்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 360 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வரும் 29ஆம் தேதி காலை 09.05மணிக்கு நடைபெற உள்ளது
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் ஆகியோர் இணைந்து ஆழித்தேரோட்ட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து ஆழித்தரோட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோயில் நிர்வாகம் மற்றும் திருவாரூர் நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார். தொடர்ந்து தேர் கட்டுமான பணிகளை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். மேலும் தேரோட்டத்தின் போது தேவைப்படும் பாதுகாப்பு பணிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆழித்தரோட்டத்தை காண வரும் பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் பீ பீ என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

















