நிலத்திற்கு செல்லும் பாதை பிரச்சனையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தியும் உரிய தீர்வு காணாத அதிகாரிகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் பெண் விவசாயி ஒருவர் மண்டியிட்டு வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்ததால் பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த பெண் விவசாயி ஒருவர் திடீரென கைகளில் மனுவை ஏந்தியவாறு மண்டியிட்டு வந்தார். இதனைப் பார்த்தவுடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் எழுந்து நின்றனர். தொடர்ந்து கீழே இறங்கிச் சென்ற மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணை எழுந்திருக்க சொல்லி மனுவை பெற்றார். மயிலாடுதுறை தாலுக்கா அகர கீரங்குடியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் விவசாயி தான் மறையூர் கிராமத்தில் ஏழு ஏக்கரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்து வருவதாகவும், அந்த நிலத்திற்கு ட்ரஸ்டுக்கு சொந்தமான நிலத்தின் வழியே போடப்பட்டிருந்த சாலையை பயன்படுத்த தயாளன் என்பவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் நிலத்திற்கு செல்வதற்கு பாதை கேட்டு மனு அளித்ததன் பேரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான புதிய இடத்தில் பாதை அமைத்து தருவதாக எதிர் தரப்பினர் உட்பட அனைவரும் அதிகாரிகளின் முன்னிலையில் ஒப்புக்கொண்டனர். ஆனால் தயாளன் குடும்பத்தினர் புதிய பாதையையும் போடுவதற்கு அனுமதிக்காமல் தகாத வார்த்தைகளை பேசி மிரட்டுவதாகவும் இதுகுறித்து இதுவரை 25 மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் மண்டியிட்டு வந்து மனு அளித்ததாக பெண் விவசாயி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். பெண் விவசாயி ஒருவர் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மண்டியிட்டு வந்து மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலத்திற்கு செல்லும் பாதைபிரச்சனையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாணாத அதிகாரிகள் கண்டித்து மனு
