மயிலாடுதுறையில் திராவிட மாணவர் பேரவை சார்பில் “பெரியார் ஒருவர்தான் பெரியார்” பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் திராவிட மாணவர் பேரவை சார்பில் “பெரியார் ஒருவர்தான் பெரியார்” என்ற தலைப்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. “பெரியாரை போற்றுவோம்” என்ற தலைப்பில் நேற்றிரவு (சனிக்கிழமை) இதே இடத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசிய நிலையில் இன்று இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு பெரியாரின் கருத்துக்களை ஆதரித்து பேசினர். கூட்டத்தில், சுபவீ பேசுகையில், பெரியார் ஒருவர்தான் பெரியார் என இன்று நாங்கள் புதிதாக சொல்லவில்லை. அதனை சொன்னவர் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன். சீமான் நேற்றைய கூட்டத்தில் யாரையெல்லாம் பெரியார் எனச் சொன்னாரோ அவர்கள் எல்லோரும் பெரியார் என சொன்னது தந்தை பெரியாரை மட்டுமே. பெரியாரை எந்த ஊரில் சீமான் இழிவுபடுத்தி பேசினாலும் மறுநாள் அதே இடத்தில் நாங்கள் மருதலித்து பேசுவோம். இந்த அரசியல் என்பது எங்கள் உணர்வு எங்கள் வாழ்க்கை ஆனால் சீமான் உங்களுக்கு அரசியல் என்பது வெறும் பிழைப்பு. காசுக்காக பேசும் சீமான் நேற்று பேசும்போது மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்று பாடிய நாமக்கல் கவிஞர் எங்கள் பெரியார் என்று கூறுகிறார். அய்யோ அதை பாடியது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நாமக்கல் கவிஞர் இல்லை. கற்க கசடற கற்றவை கற்றபின் என்ற குறளை எழுதியவர் கவிமணி பாரதியார் என்று சீமான் சொல்வார். வரலாறை படியுங்கள் என்றார். வாக்கு சரிந்து கொண்டிருப்பதால் பெரியாரை பற்றி சீமான் பேசுகிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நேற்று முதலமைச்சர் அறிவித்ததால் ஒவ்வொரு தொகுதியிலும் 10ஆயிரம் வாக்குகள் கூடியுள்ளது. மறுபக்கம் விஜய் வந்து வாக்குகளை பறிப்பதால் சீமானுக்கு பதற்றம் ஏற்பட்டதால் கடுமையாக பேசுகிறார். விஜயை நாங்கள் ஆதரிக்கவில்லை விஜய் போதை சீமான் விஷம். போதை தெளியும் விஜயால் ஒரு தேர்தலுக்குகூட தாக்குப்பிடிக்க முடியாது. திராவிடப்பன்றிகள் என்று யாரை சொல்கிறீர்கள். திராவிடம் என்ற சொல்லை 1892ல் திராவிடத்தை பெயராக வைத்து அயோத்திதாச பண்டிதர் அமைப்பை தொடங்கியவர். 1894ல் திராவிடம் என்ற சொல்லை வைத்து திராவிடம் என்ற பெயரை வைத்து கட்சி தொடங்கியவர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரை திராவிட பன்றிகள் என்று சொல்லுவதற்கு எந்த பன்றிக்கும் உரிமையில்லை என்றார்.

திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகையில்

சீமானுக்காக மயிலாடுதுறையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பெரியாருக்கு எதிரா சீமான் எடுத்துள்ள கத்தி அட்டகத்தி. பெரியாரை திட்டுவதற்கு வந்த சீமான் கடைசியில் திமுக தலைவர்கள் கருணாநிதி ஸ்டாலினைத்தான் திட்டுவார். திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு கொண்டிருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் சீமான் கம்பு சுழற்றுகிறார். பணம் கொடுத்தால் சீமான் அவரையே எதிர்த்துப் பேசுவார் அது அவருக்கு ப்ராஜெக்ட் என்று விமர்சித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள், பேராசிரியர் ஜெயராமன், திமுக பொறுப்பாளர்கள், பெரியார் கொள்கைப் பற்றாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version