பழனி கொலை வழக்கு: 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பழனியில் கடந்த மாதம் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு, அவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 17.11.2025 அன்று தோமையார் (எ) சின்னத்தம்பி (37) என்பவர் முன்பகை காரணமாகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பழனி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய பழனி நகர் பகுதியைச் சேர்ந்த பின்வரும் 5 நபர்களைப் போலீசார் கைது செய்தனர்: சூரியா ஆபிரகாம் (20) சிவா (எ) ஆரோக்கிய ரோஸி (29) சிவசங்கர் (20) விஜய் ஆதித்யா (20) மேயர் முத்து (எ) முத்து (31) கைது செய்யப்பட்ட இந்த 5 நபர்களும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அளித்த பரிந்துரையை ஏற்று, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சரவணன் அவர்கள் மேற்கண்ட 5 நபர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, பழனி நகர் காவல்துறையினர் முறைப்படியான ஆணையைச் சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, 5 நபர்களையும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தனர். காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பழனி பகுதியில் உள்ள சமூக விரோத கும்பல்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version