எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், அந்நாடு வரைபடத்தில் கூட இருக்காது என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தானின் அனுப்கார்க் நகரில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது,
”‘ஆப்பரேஷன் சிந்தூர் 1.0’ நடத்தியபோது காட்டிய கட்டுப்பாடு இனி இருக்காது. புவியியல் ரீதியில் பாகிஸ்தான் தொடர வேண்டுமா வேண்டாமா என சிந்திக்கும் நிலை உருவாகும் அளவுக்கு, இந்திய ராணுவத்தின் நடவடிக்கை வலுவாக இருக்கும். புவியியல் வரைபடத்தில் இருக்க வேண்டும் என விரும்பினால், பாகிஸ்தான் உடனே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்.
வீரர்கள் அனைவரும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். கடவுள் விரும்பினால், மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்’’’ எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது சிறப்பாக பணியாற்றிய பிஎஸ்எப் 140வது பட்டாலியன் கமாண்டான்ட் பிரபாகர் சிங், ராஜ்புத்னா ரைபிள்ஸ் மேஜர் ரிதேஷ் குமார் மற்றும் ஹவில்தார் மோகித் கெய்ரா ஆகியோருக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி சிறப்பு அங்கீகாரமும் பாராட்டும் வழங்கினார்.