திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு பாத தரிசனம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சைவசமயத்தின் தலைமை பீடமாகவும் பஞ்சபூத தலங்களில் மண்ணுக்குரிய தலமாகவும் ,பிறந்தாலும்,பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடிய தலமாக விளங்கும் பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் இன்று மார்கழி திருவாதிரை திருவிழாவை ஒட்டி நள்ளிரவு அருள்மிகு தியாகராஜசுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைப்பெற்றது ,தொடர்ந்து நடராஜருக்கும்,சிவகாமசுந்தரி அம்மனுக்கும்,சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன.
நடராஜபெருமானுக்கும்,சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டு வீதி உலா நடைப்பெற்றது.
தொடர்ந்து காலை முதல் அருள்மிகு தியாகராஜசுவாமி பதஞ்சலி,வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாததரிசனம் தொடங்கியது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்று தியாகராஜசுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.














