தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்பட்ட தேனி மாவட்டத்தில், அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்தது. “காலம் முழுவதும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, அதே திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததை எங்களால் ஏற்க முடியாது” என அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வந்தனர். இதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் இணையும் படலம் தீவிரமடைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் கடமலை-மயிலாடும்பாறை (க.மயிலை) ஒன்றியத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணையும் பிரம்மாண்ட நிகழ்வு கடமலைக்குண்டுவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எம். ராமர் முன்னிலை வகித்து புதிய நிர்வாகிகளை வரவேற்றார். இந்த நிகழ்வில் க.மயிலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 18 கிளைச் செயலாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

குறிப்பாக குமணன்தொழு, வனத்தாய்புரம், மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் விலகியதால், அப்பகுதியில் ஓபிஎஸ்-ன் அரசியல் கூடாரம் முற்றிலும் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க கிராமப்புற கிளைச் செயலாளர்கள் இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது, ஓபிஎஸ் தரப்பிற்குப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தல்களில் தேனி மாவட்டத்தில் அதிமுகவின் பலம் இந்த இணைப்பின் மூலம் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version