இராணுவ அதிகாரியாகும் வாய்ப்பு! NCC பயிற்சி முகாம் துவக்கம்

இந்தியாவின் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்கப் படைப்பிரிவான குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (Madras Regimental Centre – MRC), தேசிய மாணவர் படையில் (NCC) உள்ள பட்டதாரி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் கோலாகலமாகத் தொடங்கியது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இந்தக் கவுரவமிக்க மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில், பட்டதாரி மாணவர்களுக்கான இந்த முகாம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மெட்ராஸ் ரெஜிமென்டின் துணை கமாண்டன்ட் கர்னல் நித்தின் குட்டப்பா அவர்கள் இந்த சிறப்புப் பயிற்சி முகாமினை முறைப்படி துவக்கி வைத்து, மாணவர்களிடையே ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.

மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் இந்தத் தீவிரப் பயிற்சி முகாமில், மாணவர்களுக்குத் தற்காலப் போர் முறைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களை இயக்குவது குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முக்கியமாக, படை அணிவகுப்பு (Parade), சவாலான மலையேற்றம் (Mountaineering) போன்ற உடற்தகுதிப் பயிற்சிகளுடன், புதிய ரக ஆயுதங்களான ஏ.கே. 203 (AK 203), ஏ.ஐ.ஜி (AIG) அசால்ட் ரைபிள் (Assault Rifle) உள்ளிட்ட அதிநவீனத் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்துவது, கையாள்வது உள்ளிட்ட கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த உயரிய பயிற்சி முகாமில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகள், அத்துடன் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளைச் சேர்ந்த மொத்தம் 54 பட்டதாரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சியின் நிறைவில், இதில் பங்குபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மிக முக்கியமாக, இந்தச் சிறப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்கள், இராணுவத்தில் ராணுவ அதிகாரிகளாகப் பணியில் சேர, தகுதித் தேர்வு (Written Examination) இன்றி நேரடியாகத் தகுதி பெறுகின்றனர் என்பது இந்த முகாமின் தனிச்சிறப்பாகும். இந்தப் பயிற்சி, மாணவர்களின் இராணுவ சேவை கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக அமைகிறது.

Exit mobile version