ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் தாக்குதல்களை எதிர்த்து வெற்றி கண்ட ‘சிங்கப் பெண்கள் ‘ !

ஜம்மு-காஷ்மீர் :
ஜம்மு-காஷ்மீரின் ஆக்னூர் எல்லைப் பகுதியில் நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ஏழு பெண் வீராங்கனைகள் மூன்று நாட்கள் மற்றும் இரவுகள் தொடர்ந்து போராடி, இரண்டு முக்கிய நிலைகளை வெற்றிகரமாக பாதுகாத்தனர்.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இருந்து வந்த எதிரி ஏவுகணைகளை எதிர்த்து, தொடர்ந்து போராடிய இவ்வீர பெண்கள், தங்களது நிலைகளை பாதுகாக்கும் பணியில் பெரும் சாதனையை படைத்துள்ளனர். இந்த ஆபரேஷனுக்கு தலைமையகத்திலிருந்து நேரடியாக வழிகாட்டியவர், உதவிக் கமாண்டர் நெஹா பண்டாரி. இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேவையில் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையின் மூலம், நேரடி போர் முன்னணியில் பெண் அதிகாரியாக பங்கேற்ற முதலாவது வீராங்கனையாக நெஹா பண்டாரி உயர்ந்துள்ளார். அவரின் தலைமையில் பணியாற்றிய ஆறு பெண் வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களை தைரியமாக எதிர்த்தனர்.

இந்த ஏழு பேரில் நான்கு பேர் 2023ஆம் ஆண்டில் சேவையில் இணைந்த புதிய வீராங்கனைகள். மற்ற இருவர் 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர்.

“ஆபரேஷன் சிந்தூர்” வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இந்த பெண் வீரர்களின் செய்தி தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பெண்கள் போர்க்களங்களில் எவ்வாறு முக்கிய பங்காற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளது இந்த நடவடிக்கை.

Exit mobile version