அகமதாபாத் :
242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் அருகே விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் விஷ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
39 வயதுடைய விஷ்வாஸ் குமார் இந்திய வம்சாவளியையுடைய இங்கிலாந்து குடிமகன். கடந்த 20 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறார். இந்தியாவிலுள்ள தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு, மூத்த சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் மீண்டும் லண்டன் திரும்பும் பயணத்தில்தான் இந்த துயர சம்பவம் நடந்தது.
விபத்து தருணம்: “எல்லாம் சில வினாடிகளில் நடந்துவிட்டது”
விஷ்வாஸ் குமார் தற்போது அகமதாபாத் அசர்வா சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்பு, கண்கள் மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் இருக்கும் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது,
“விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் சத்தம் கேட்டது. பின் திடீரென விழுந்தது. விழுந்த இடத்தில் விழுந்து எழுந்ததும், என் அருகில் பல உடல்கள் கிடந்தன. மிகவும் பயந்துவிட்டேன். பிறகு எழுந்து ஓடினேன். யாரோ ஒருவர் என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்” எனக் கூறினார்.
விஷ்வாஸ் குமார் விமானத்தில் 11A என்ற இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சகோதரர் எங்கே ?
விபத்துக்குள்ளான விமானத்தில் விஷ்வாஸுடன் அவரது சகோதரர் அஜய் குமார் ரமேஷும் இருந்தார். ஆனால் அவர் தொடர்பில் வரவில்லை. “நாங்கள் DIU-விற்கு சென்றோம். அவர் என்னுடன் இருந்தார். இப்போது அவரை காண முடியவில்லை” என்று விஷ்வாஸ் வேதனையுடன் கூறியுள்ளார்.
தந்தைக்கு வீடியோ கால் !
விபத்துக்குப் பிறகு மிகக் குறுகிய நேரத்தில் விஷ்வாஸ் தனது தந்தைக்கு வீடியோ கால் செய்து, “விமானம் விபத்துக்குள்ளானது, எனக்கு என்ன ஆனது தெரியவில்லை” என்று கூறியதாக, அவரது மற்றொரு சகோதரர் நயன் குமார் ரமேஷ் ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார். விஷ்வாஸ் தப்பிப் பிழைத்தது எப்படி என்பதை அவரும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
நலம் பெறுகிறார் விஷ்வாஸ்
அசர்வா மருத்துவமனை அறுவை சிகிச்சைத் தலைவர் ரஜ்னிஷ் படேல் கூறும்போது,
“விஷ்வாஸின் உடல்நிலை சீராக உள்ளது. புகைப்படங்களில் காயங்கள் அதிகமாகத் தெரியினாலும், தற்போதைய நிலையில் அவர் உறுதியுடன் இருக்கிறார். சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்” என தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சரின் பதில்
விபத்து நடந்ததையடுத்து அகமதாபாத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
“நல்ல செய்தி என்னவென்றால் ஒருவர் உயிருடன் தப்பித்துள்ளார். அவரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன்” எனக் கூறினார்.