அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது விழுப்புரம் திமுகவில் புயலை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் அந்த பேனர்களில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். அங்கு தான் விழுப்புரம் கலைஞர் அறிவாலயமும் அமைந்துள்ளது. தான் பார்த்து பார்த்து கட்டிய அறிவாலயத்தில் லட்சுமணன் அமர்வதில் பொன்முடிக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை.
இதனையடுத்து லட்சுமணனை எதிர்க்கும் வகையில் பல உள்ளடி வேலைகளை பார்த்து வந்தார் பொன்முடி. ஆனால் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால், தலைமையில் கடும் அதிருப்திக்கு ஆளாகி கட்சியில் இருந்தே ஒதுக்கப்பட்டார் பொன்முடி. இதைத்தொடர்ந்து லட்சுமணனின் கொடி விழுப்புரத்தில் உயரப் பறக்க தொடங்கியது. தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கி பொன்முடியின் இடத்தை பிடிக்க முட்டி மோதி வருகிறார் லட்சுமணன்.
இந்நிலையில் விழுப்புரம் மண்டல பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடி நியமிக்கப்படாமல் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டத்திற்கான போஸ்டர்கள் மற்றும் பேனர்களிலும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை.