புதுடில்லி :
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டில்லியில் நிதி ஆயோக் அமைப்பின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதில் பங்கேற்றார்.
2047ம் ஆண்டிற்குள் “வளர்ந்த இந்தியா” குறிக்கோளின் கீழ், நாட்டின் வளர்ச்சித்திட்டங்கள், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பங்கீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், திரிபுரா முதல்வர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கூட்டத்தின் போது, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” குறித்தும் பிரதமர் மோடி கூட்டத்தில் விளக்கங்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 4.10 மணிக்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளார். டில்லி நிகழ்ச்சிகள் முடிந்து, அவர் இன்று இரவே தமிழகத்திற்கு திரும்பவுள்ளார்.