வங்கக்கடலில் புதிய தாழ்வு அழுத்தம் – தமிழகத்தில் கனமழை

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள தாழ்வு காற்றழுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை இலங்கை கடற்கரை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் இந்த தாழ்வு அழுத்தம் உருவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த அமைப்பு மேற்கு–வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என வானிலைத் துறை கணித்து உள்ளது. மேலும் நவம்பர் 19ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் இன்னொரு தாழ்வு அழுத்தம் உருவாகும் சாத்தியமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையின் விளைவாக தமிழகத்தில் இன்றுமுதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக தென் தமிழகமும் டெல்டா மாவட்டங்களும் அதிகளவு மழையை எதிர்பார்க்கலாம் என்று தகவல் கூறப்படுகிறது.

இன்றைய தினம் மாநிலத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி–மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று கனமழை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை மாநிலத்தில் மழை தீவிரமடையும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மிக கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் தீவிரமடையும் எனவும் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version