தமிழக இளைஞர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் உன்னத நோக்கத்துடன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ‘திறனகம்’ (மாவட்ட திறன் மையங்கள்) எனும் புதிய முன்னெடுப்பைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது ‘குறிஞ்சி’ இல்ல முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று (03.03.2026), 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு மாவட்ட திறன் மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முறைப்படி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘திறனகம்’ மையங்கள், மாநில இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனைகள், பயிற்சி இணைப்புகள் மற்றும் நேரடி வேலைவாய்ப்புத் தகவல்களை வழங்கும் ஒரு முழுமையான தளமாகச் செயல்படும். முன்னதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 38 மாவட்டங்களிலும் பிரத்யேக மாவட்ட திறன் அலுவலகங்கள் (திறனகம்) அமைக்கத் திட்டமிடப்பட்டு, தற்போது அதன் பணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரைத்தளத்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘திறனகம்’ மையத்தில் சிறப்புத் திறப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதலமைச்சர் காணொலி வாயிலாகத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, திண்டுக்கல் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்றவர்களுக்குப் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி ஜோ. இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருமதி திருமலைச்செல்வி, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) திரு. அருண் நேரு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு. ராப்சன் டேவிட் மற்றும் மாவட்ட திறன் அலுவலர் திருமதி பவித்ரா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார். தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் முடிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்த அமைச்சர், தொடர்ந்து புதிய பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு. பிரபாகரன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. ஜி.டி.யுவராஜ் பாபு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு. சிற்றரசு, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி, மாவட்ட துணைப் பதிவாளர் திரு. க.பா.கா.கார்த்திகேயன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. பிரபு பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், அப்பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புச் சூழலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
