Goaவில் நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டி – தேனியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு 

Goaவில் கடந்த 27.12.2025 முதல் 04.01.2026 வரை நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், 18 மாநிலங்களைச் சேர்ந்த சிலம்ப வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் தேனி மாவட்டம் அரண்மனைபுதூரைச் சேர்ந்த ‘தேனி சிலம்பம் பாண்டி பயிற்சி மையம்’ சார்பில் பங்கேற்ற வீரர்கள், சிறப்பான ஆட்டத்தால் 8 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தனர்.
தேனி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. போட்டிகளில் வீரர்கள் காட்டிய ஒழுக்கம், உடல்திறன், தற்காப்புத் திறன் மற்றும் பாரம்பரிய கலைக்கான அர்ப்பணிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக இளம் வயதிலேயே தேசிய மேடையில் பதக்கங்களை வென்றது, மாவட்டத்தின் விளையாட்டு வளர்ச்சிக்கான சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
தேனிக்கு வெற்றியுடன் திரும்பிய வீரர்களுக்கு, அரண்மனைபுதூர், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பெற்றோர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகக் கூடி திலகம் இட்டு, வானவேடிக்கையுடன் பாரம்பரிய முறையில் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீரர்களுக்கு மலர் தூவி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த சாதனையின் பின்னணியில், சிலம்பம் பாண்டி, சிலம்பம் கண்ணன், சிலம்பம் கவிதா ஆகிய பயிற்சியாளர்களின் தொடர்ந்த பயிற்சி, வழிகாட்டல் மற்றும் ஊக்கமூட்டல் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டது. அவர்கள் அளித்த கட்டுப்பாடான பயிற்சி மற்றும் நெறிப்படுத்தல் காரணமாகவே, தேசிய அளவில் இந்த வெற்றி சாத்தியமானதாக வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும், சிலம்பம் போன்ற தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலையை தேசிய அளவில் உயர்த்திக் காட்டிய இந்த வெற்றி, இளம் தலைமுறையை விளையாட்டிலும் பாரம்பரிய கலையிலும் ஈடுபட ஊக்குவிக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தொடர்ந்து ஆதரவு வழங்கினால், சர்வதேச அளவிலும் தேனி சிலம்ப வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கையும் வெளிப்பட்டது.

Exit mobile version