“என் முதல் அரசியல் எதிரி சாதிதான்…” – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் போது, தனது முதல் அரசியல் எதிரி ‘சாதிதான்’ என்று கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பாக மூன்றாவது நாளாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் போது மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ராஜராஜ சோழனைப் போன்று மத, சமுதாய வேறுபாடுகளைத் தாண்டி, அனைவருக்கும் சொந்தமானவர்களாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சாதி மனிதர்களை பிரிக்கும் ஒன்று என்பதால், அதனுடன் யாரும் வாழக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி 100 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்க, தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவது என்பது நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version