புதுக்கோட்டை மெய்வழிச் சாலையில் 69 ஜாதிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் பொங்கல் திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அமைந்துள்ள மெய்வழிச் சாலை, ஜாதி மற்றும் மதப் பிரிவினைகளைக் கடந்து மனிதநேயத்தை நிலைநாட்டும் ஒரு உன்னத பூமியாகத் திகழ்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற பொண்ணுரெங்க தேவாலயத்தில், மதம் மற்றும் ஜாதிகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய 81-வது ஆண்டு பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எனப் பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட 69 ஜாதிகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர், ‘மெய்வழி’ என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் திரண்டு இந்த விழாவைக் கொண்டாடியது சமூக நல்லிணக்கத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்தது. இச்சாலையில் வசிப்பவர்களை ‘அனந்தர்கள்’ என்றும் ‘பிரம்ம குலத்தினர்’ என்றும் அழைப்பது வழக்கம். சீக்கியர்களைப் போலவே தலையில் தலைப்பாகை அணிந்து தனித்துவமான கலாச்சார அடையாளத்துடன் வாழும் இவர்கள், ஆண்டுதோறும் தைப் பொங்கல் திருநாளைத் தங்களது வாழ்வியல் நெறியின் முக்கிய விழாவாகக் கருதி மெய்வழிச் சாலைக்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்த மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் பணியாற்றினாலும், மெய்வழி மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மெய்வழிச் சாலைக்குத் திரும்புவதை ஒரு புனிதக் கடமையாகக் கொண்டுள்ளனர். நடப்பு ஆண்டு விழாவில், மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் பரம்பரையைச் சேர்ந்த சபைக்கரசர் சாலை வர்கவான் அவர்கள் தலைமை தாங்கி விழாவை வழிநடத்தினார். அதிகாலை முதலே தேவாலய வளாகத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான அனந்தர்கள், சபைக்கரசரின் சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, அவரிடமிருந்து புனித நீரைப் பெற்றுக் கொண்டனர். அந்தப் புனித நீரைத் தங்களது பொங்கல் பானைகளில் ஊற்றி, “ஆதி மெய்வழி” என்ற முழக்கங்களுடன் பொங்கலிட்டு வழிபாடுகளைச் செய்தனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து, எவ்வித பாகுபாடுமின்றிப் பொங்கல் வைத்த காட்சி மெய்வழிச் சாலையை ஒரு ஆன்மீக சங்கமமாக மாற்றியது.

Exit mobile version