திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிய சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு நேதாஜி சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை திருவள்ளூர் பஜாருக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்காததால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் நேதாஜி சாலையில் இருந்து வீரராகவர் கோயில் குளம் வரையில் 1200 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழைக்கு முன்பாக பணிகளை விரைவாக முடிகவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அருகே இருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறதா என உணவை உண்டு பரிசோதித்தார். இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர், உதவி பொறியாளர், நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version