அமைச்சர் பதவி ராஜினாமா: ரகுபதி மசோதா தாக்கல் செய்ததால் பரபரப்பு!

சென்னை:
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, எந்நேரமும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. சட்டசபையில் இன்று (ஏப்ரல் 26) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மசோதாவை தாக்கல் செய்ய அவர் இருந்தும், அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது, வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தபோது, கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமின் பெற்ற அடுத்த நாளே அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

இது சாட்சியர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற காரணத்தால், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்மறை மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நீங்கள் அமைச்சராக இருந்தபோது புகார்தாரர்களுடன் உடன்பாடு செய்ததை ஐகோர்ட் சுட்டிக்காட்டியது; ஜாமின் வழங்கியது எங்கள் தவறுதான்,” என கடுமையாக விமர்சித்தனர்.

மேலும், “அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமின் வேண்டுமா?” என்பதை 4 நாட்களில் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடும் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, சட்டசபையில் சனிக்கிழமை நடைபெற வேண்டிய மசோதாவை ரகுபதி தாக்கல் செய்ததால், செந்தில்பாலாஜி பதவி ராஜினாமா செய்யும் நேரம் நெருங்கிவிட்டது என்ற பரபரப்பான தகவல்கள் எழுந்துள்ளன.

Exit mobile version