வெறும் ‘மாஸ்’ காட்டி அரசியல் பயன் இல்லை : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தவெக தலைவர் விஜய் அரசியலில் வெறும் ‘மாஸ்’ காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடித்து வைத்திருக்கும் பணமே சிலருக்கு துணை. ஆனால் எனக்கு எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ‘மாஸ்’ என்கிற மக்கள் தான் துணை. ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்கவே இங்கு வந்துள்ளேன்” என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பொதுவெளியில் பேசும்போது அனைவரும் நாகரிகமாக பேச வேண்டும். அரசியலில் வெறும் மாஸ் காட்டுவதால் மட்டும் எந்தப் பிரயோஜனமும் இல்லை” என தெரிவித்தார்.

மேலும், தவெக தலைவர் விஜயை பாஜவின் ‘B’ டீம் என திமுகவினர் விமர்சிப்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
“ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை பரப்புவதிலும், வதந்திகளை உருவாக்குவதிலும் திமுகவினர் நிபுணர்கள். அவர்கள் அப்படித்தான் பரப்புவார்கள்” என்று பதிலளித்தார்.

செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கு முன்பு அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்ததாக குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன்,
“அப்படி பார்த்தால் அவர்கள் திமுகவின் ‘B’ டீமா, அல்லது பாஜவின் ‘B’ டீமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என கூறினார்.

Exit mobile version