மயிலாடுதுறை அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான பெருஞ்சேரி வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாசி மகோற்சவம்:- 9- ஆம் நாள் திருநாளில் திருத்தேரோட்டம் வெளிநாட்டவர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ சுவாதந்தர நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலம் குரு பரிகார தலமாக விளங்குகிறது. மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வியாழன் வழிபட்டு தேவர்களுக்கெல்லாம் தலைவராக வரம் கேட்டதாகவும், அவரை பெருஞ்சேரி கிராமம் சென்று ஈசனை பிரதிஷ்டை செய்து வணங்கினால் அருள் கிடைக்கும் என்று மாயூரநாதர் அருளியதால், பெருஞ்சேரியில் வியாழன் சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டிருந்த இக்கோயிலின் கும்பாபிஷேகம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்று மாசி மகோற்ச்சவம் மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் 9ஆம் திருநாள் திருநாளான இன்று திருத்தோரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ சுவாதந்தர நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ வாகீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர் , சுப்பிரமணியர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவிலில் உட்பிரகாரம் சுற்றி வந்தனர். அதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் ஸ்ரீ சுவாதந்தர நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு நடைபெற்ற தேரோட்டத்தை திரளான பக்தர்கள் கலந்து சிவ! சிவ!! வாகீஸ்வரா!!!என கோஷங்களை எழுப்பி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் மனமுருகி சுவாமி தரிசனம் செய்து தேரை இழுத்தது பக்தர்களை பரவசத்தை ஏற்படுத்தியது. தேரானது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. மார்ச் 2 ஆம் தேதி திங்கள்கிழமை மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
