கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் மராத்தா சமூகத்தின் போராட்டம் மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது.
சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் தலைமையில் ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதி கிடைக்கும் வரை, உயிரே போனாலும் போராட்டக்களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீட்டு கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்த நிலையில், போராட்டம் தீவிரம் அடைந்ததால், மும்பை உயர் நீதிமன்றம் போராட்டக்காரர்கள் சாலைகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தொடர்ந்து, விதிமுறைகளை மீறியதாகக் கூறி, போராட்டத்தை தொடர அனுமதி மறுத்த மும்பை போலீசும், ஆசாத் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனோஜ் ஜராங்கே பாட்டீல், “நீதியையும் கடவுளையும் நாங்கள் நம்புகிறோம். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு 100 சதவீதம் உள்ளது. 2 ஆண்டுகளாக சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாகவே போராட்டம் நடத்தி வருகிறோம். கோர்ட் உத்தரவு வந்தவுடன் வாகனங்களை அகற்றியுள்ளோம். ஆசாத் மைதானத்தில் இருந்து எங்களை வெளியேற்ற அரசுக்கு அதிக செலவாகும்,”
என்று தெரிவித்துள்ளார்.
போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் மும்பை நகரில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன், பதட்டமான சூழல் நிலவுகிறது.
