மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கனவான புறவழிச்சாலை திட்ட பணிகளை டிசம்பரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பேட்டி:-
மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க 2010-ஆம் ஆண்டு திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, மணக்குடியில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு பேருந்துகள் சென்று வருவதற்கு புறவழிச்சாலை அமைய வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்நிலையில், புறவழிச்சாலை பணிக்காக ரூ.175 கோடி தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் கூறுகையில், மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ரூ.56 கோடி திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இம்முறை எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின்பு தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதனைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு முதல் 16.5 கி.மீ தொலைவுக்கு நிலங்களை கையகப்படுத்த தொடங்கி, கடந்த மார்ச் மாதம் வரை ஆனைமேலகரம் ஊராட்சி முதல் திருவிழந்தூர், வள்ளாலகரம், உளுத்துக்குப்பை, மணக்குடி, மன்னம்பந்தல் ஊராட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 11 கி.மீ தொலைவுக்கு மட்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள தொலைவுக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினேன்.
இந்த புறவழிச்சாலை திட்டம் ரூ.175 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்துக்கு வரவுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும் நன்றி. புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைப்பார். 42 மாதங்களில் பணிகளை முடிப்பதற்கு டெண்டரில் கோரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கனவான புறவழிச்சாலை திட்ட பணிகள் டிசம்பரில் தொடங்கிவிடும். மேலும் மாப்படுகை, நீடூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.




















