தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான நகர்வுகள் தொடர்ந்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரங்களை வலுப்படுத்தும் விதமாகப் புதிய இணைப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மு.க.அழகிரி பேரவையின் ஈரோடு மாவட்டத் தலைவரும், பெருந்துறை பகுதியில் புகழ்பெற்ற ‘அருக்காணி ஓட்டல்’ உரிமையாளருமான சுகுணா (எ) சத்யன், அண்மையில் தன்னை அண்ணா திமுகவில் இணைத்துக் கொண்டார். கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இணைந்த அவர், கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
இதனை முன்னிட்டு, ஈரோடு கிழக்கு புறநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோரைச் சத்யன் நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின் போது, ஈரோடு மாவட்டத்தில் கழகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்தும், வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலப்பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. புதிய நிர்வாகியின் வருகை பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்ணா திமுகவிற்குப் கூடுதல் பலத்தைத் தரும் எனத் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது, அதிமுக மாநில எம்ஜிஆர் மன்றத் துணைத்தலைவர் டி.டி.ஜெகதீஷ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வேட்டுவம்பாளையம் அருணாசலம், பெருந்துறை ஒன்றியச் செயலாளர்கள் வைகை தம்பி (எ) டிவிரஞ்சித் ராஜ், அருள்ஜோதி செல்வராஜ், விஜய் (எ) ராமசாமி, ராம் (எ) ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். மேலும், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் அருண்குமார், பெருந்துறை கிழக்கு ஒன்றியத் துணைச்செயலாளர் அன்பரசு, மாவட்ட இலக்கிய அணித் துணைச்செயலாளர் சந்திரன் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பூபாலன், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் கழக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
