தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கான பிரத்யேக தேர்தல் விழிப்புணர்வு இலட்சினையை (Logo), மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான க.இளம்பகவத் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி அறிமுகப்படுத்தினார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இலட்சினையானது, மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும் விழிப்புணர்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
தேர்தல் திருவிழாவில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலட்சினையை அறிமுகப்படுத்திப் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் செம்மையாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என்றார். குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகள் குறித்த செயல்முறை விளக்கங்கள் ஏற்கனவே மாவட்டம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுப் பேரணிகள், கையெழுத்து இயக்கங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் ‘எனது வாக்கு – எனது உரிமை’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு இலட்சினை சமூக வலைதளங்களிலும் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பரவலாகப் பகிரப்படும். நிகழ்ச்சியின் போது, தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். ஜனநாயகக் கடமையாற்றத் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், குறிப்பாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் உறுதி செய்யப்படும் என்றும் கலெக்டர் க.இளம்பகவத் உறுதி அளித்தார்.

















