சிறுமுகை அருகே தொடரும் சிறுத்தை அட்டகாசம் வனத்துறையைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை, ஓதிமலை, ரங்கம்பாளையம் மற்றும் அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த சில வாரங்களாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காகக் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஓதிமலை அடிவாரப் பகுதிகளில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவற்றைப் வேட்டையாடுவதற்காக மலைப்பகுதியிலிருந்து வெளியேறும் சிறுத்தைகள், தற்போது குடியிருப்பு மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளன.

கடந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும் நான்கு ஆடுகள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களைச் சிறுத்தைகள் கவ்விச் சென்றுள்ளன. குறிப்பாக, கடந்த வாரம் அய்யம்பாளையம் பகுதியில் பட்டப்பகலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களின் கண் முன்னாலேயே சிறுத்தை ஒன்று ஆட்டைத் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. கோவை வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் சக்திவேல் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “வனப்பகுதியில் சிறுத்தைகள் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, பெத்திக்குட்டை மற்றும் ஓதிமலை அடிவாரங்களில் உடனடியாகக் கூண்டுகள் வைத்துச் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

இருப்பினும், வனத்துறையினர் தொடர்ந்து மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டும் பொதுமக்கள், இந்தப் பிரச்சனைக்கு உரியத் தீர்வு காணாவிட்டால் ஜனவரி முதல் வாரத்தில் சிறுமுகை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாலை நேரங்களில் தோட்டங்களுக்குச் செல்லவும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் அச்சப்படும் சூழல் நிலவுவதால், வனத்துறை உயர்மட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டுத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version