கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனு, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.
வழக்கறிஞர்கள் நேரில் முறையீடு
சம்பவம் தொடர்பாக த.வெ.க. சார்பில் வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான குழு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசிக்கும் நீதிபதி எம். தண்டபாணியை நேற்று நேரில் சந்தித்து முறையீடு செய்தது.
அப்போது, “கரூர் கூட்ட நெரிசல் விபத்தாகத் தெரியவில்லை; திட்டமிட்ட அரசியல் சதி போல் உள்ளது. கூட்டத்தில் கற்கள் எறியப்பட்டன, போலீசார் தடியடி நடத்தினர். எனவே, சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். சிசிடிவி காட்சிகளை பாதுகாக்கவும், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவும் வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீதிபதி அறிவுறுத்தல்
இதற்கு பதிலளித்த நீதிபதி தண்டபாணி, “சம்பவம் மிகுந்த துயரமானது. உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். கரூர், மதுரை கிளை உயர் நீதிமன்றத்தின் எல்லைக்குள் வரும் பகுதி. எனவே, அங்கு முறைப்படி மனு தாக்கல் செய்யுங்கள். மதுரை கிளையில் இன்று பிற்பகல் விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
மனு தாக்கல்
நீதிபதியின் அறிவுறுத்தலையடுத்து, த.வெ.க. சார்பில் இன்று காலை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், கடைசி நேரத்தில் நீதிபதி அமர்வில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.