கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ! மூவர் குழு நியமனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிகழ்வை இதுவரை தமிழக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழு விசாரித்து வந்தது. ஆனால், முழுமையான உண்மை வெளிப்படவேண்டும் என்பதற்காக, சிபிஐ விசாரணை அவசியம் என தவெக மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம்

சிபிஐ விசாரணை கோரும் ஐந்து மனுக்கள் இணைத்து விசாரிக்கப்பட்டன. இதனை நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் “மாநில அளவிலான குழு விசாரணையால் உண்மை மறைக்கப்படும் அபாயம் உள்ளது. சுயாதீனமான அமைப்பு போன்ற சிபிஐ விசாரணை மட்டுமே நம்பகமானது” என வலியுறுத்தப்பட்டது.

மற்றொரு புறம், தமிழக அரசு தரப்பில் “நிகழ்வுக்கான காரணம் விஜய் தாமதமாக வருவதே; அதுமட்டுமின்றி, மாநில புலனாய்வுக் குழு போதுமான திறனுடன் செயல்படுகிறது” என வாதம் முன்வைக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் கேள்விகள்

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “உடற்கூராய்வுக்கு எத்தனை ஸ்லேப்கள் பயன்படுத்தப்பட்டது?”, “மதுரைக்கிளையில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது சென்னை உயர்நீதிமன்றம் தனியாக புலனாய்வுக் குழுவை ஏன் நியமித்தது?” என்ற கேள்விகளை எழுப்பினர்.

சிபிஐ விசாரணை உத்தரவு

விவாதங்களின் பின்னர் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க மூவர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார். அவருடன் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு கண்டனம்

அத்துடன், மதுரைக்கிளையில் வழக்கு நிலுவையில் இருந்தபோதும், சென்னை உயர்நீதிமன்றம் தனியாக தலையிட்டது சரியானது அல்ல என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் பக்க விளைவுகள்

இந்த தீர்ப்பு தவெக தரப்பில் பெரிய அரசியல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை குறித்து அவரது மனைவி “எங்களிடம் ஆலோசனை இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என வீடியோ வழியாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version