தமிழகம் முழுவதும் அனைத்து சமூக நீதி விடுதிகளிலும் ஜிம் வசதி, வைபை வசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்தி தரப்படும் என திருவாரூரில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை மாணவர்களிடம் உறுதி அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட கிடாரம் கொண்டான் பகுதியில் செயல்படும் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரியின் சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் கல்லூரி விடுதியின் தரம் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அறிந்து கொள்வதற்காக உணவை சுவைத்து பார்த்தார். தொடர்ந்து விடுதியின் சமையலறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் தங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் தேவை என கேட்டனர். உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழகம் முழுவதும் அனைத்து சமூக நீதி விடுதிகளிலும் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் வசதியும், வைபை வசதியும், செல்போன்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாக்கப்பட்ட பெட்டகங்கள் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் அனைத்து சமூக நீதி விடுதிகளிலும் வைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்கிறது என மாணவர்களிடம் உறுதி அளித்தார்

















