புதுடெல்லி: 2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான இறுதி நாளை வருமான வரித்துறை செப்டம்பர் 15, 2025 வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதலில், இந்த காலக்கெடு ஜூலை 31, 2025 அன்று முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருமான வரி படிவங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக, பொதுமக்கள் சிக்கல் இல்லாமல் தாக்கல் செய்யும் வகையில் இந்த அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
“2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்காக வெளியிடப்பட்ட ஐடிஆர் படிவங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோர் அதற்கேற்ப தயாராக சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகவே, தாக்கல் செய்யும் காலக்கெடுவை செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கிறோம்.”
இந்த அறிவிப்பால், தனிநபர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, அவர்களது வருமானத் தரவுகளை முறையாக ஆய்வு செய்து, தவறின்றி தாக்கல் செய்ய தேவையான நேரம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
வருமான வரி செலுத்துவோர் இந்த புதிய காலக்கெடு வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது ஐடிஆர் தாக்கலை முன்னதாகவே முடித்துக்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.