ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

தெஹ்ரான் / ஜெருசலேம் :
மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் பதற்றம் இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை இன்று நடத்தியது. இதனால் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு சூழல் மிகவும் பதற்றமாக மாறியுள்ளது.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு பதிலடி: பல ஆண்டுகளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் மோதல்களில் ஹமாஸின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸுக்கு ஆதரவளிக்கிறது எனக் கூறப்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனைக் கண்டித்து, அந்த அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் பல ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த முயற்சி எந்த முடிவும் அளிக்காமல் தோல்வியடைந்தது.

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: இந்தச் சூழலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள ஏவுகணை உற்பத்தி தளங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை இன்று நடத்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததாவது :

“Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நாளைய இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்படும் !”

அமெரிக்கா உறுதி: தொடர்பே இல்லை !
இந்த தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். ஆனால், இஸ்ரேல் தாக்குதலுக்கான பின்னணி குறித்து அமெரிக்க உளவுத்துறைகள் ஏற்கனவே சந்தேகம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வான்வெளி மூடல் – விமான சேவைகள் பாதிப்பு :
தாக்குதலையடுத்து ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளது. பதிலடி அச்சுறுத்தலுக்கு தயாராக இஸ்ரேலும் தனது வான்வெளியை மூடியுள்ளது.
இதனால், இந்தியா, லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நாடுகளுக்கிடையேயான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா தெரிவித்துள்ளதாவது :

“இந்தியாவிலிருந்து புறப்பட்ட விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. நியூயார்க் மற்றும் லண்டனில் இருந்து தில்லி நோக்கி வந்த விமானங்கள், ஈரான் வான்வெளியை தவிர்த்து மும்பைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளன.”

Exit mobile version