கானாடுகாத்தானில் விமான பயிற்சி நிலையத்திற்கு நிலம் எடுப்பதா? பழையூர் கிராம மக்கள் அதிரடி புகார்!

: காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பகுதியில் மாநில அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள புதிய விமானப் பயிற்சி நிலையத்திற்காக (Flight Training Centre), தங்களது வாழ்வாதார நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் அருகே உள்ள செட்டிநாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பகுதியை ஒட்டி, தமிழக அரசின் சார்பில் விமானப் பயிற்சி நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக, கானாடுகாத்தான் பழையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 326 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஆரம்பம் முதலே கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பழையூர் கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆட்சியர் பொற்கொடியைச் சந்தித்து அவர்கள் அளித்த புகார் மனுவில், தலைமுறை தலைமுறையாகத் தங்கள் வசம் உள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர்.

இது குறித்து கானாடுகாத்தான் எஸ்.மோகன்தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விமானப் பயிற்சி நிலையத்திற்காக அரசு எடுக்க முயற்சிக்கும் நிலம் அனைத்தும் பழையூர் மக்களுக்குச் சொந்தமானது. இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், அரசுத் தரப்பில் தற்போது மேல்முறையீடு செய்திருப்பதாகக் கூறுகின்றனர். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், எங்களது வாழ்வாதாரமாக விளங்கும் இந்த நிலத்தைப் பறித்து விமானப் பயிற்சி நிலையம் அமைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை அரசு கைவிட வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

அரசின் இந்தத் திட்டத்தினால் நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால், நிலம் கையகப்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் முறையிட்டனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கானாடுகாத்தான் பகுதியில் அமையவுள்ள இந்த விமானப் பயிற்சி நிலையம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என ஒரு தரப்பினர் கூறினாலும், நில உரிமையாளர்களின் எதிர்ப்பு இந்தத் திட்டத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Exit mobile version